President's Message
K. M. Subramanian
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
நமது சங்கத்தின் சார்பில், இக்கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கி, பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, 18.05.2024, அன்று நமது சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது குருவும் வழிகாட்டியுமான நமது சங்கத்தின் கௌரவத் தலைவர் பாப்பீஸ் சக்திவேல் அண்ணா அவர்கள் மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவி மகாலட்சுமிக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு ரூ.10,000/- ஊக்கத்தொகை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டும், நினைவுப்பரிசும், 50 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,08,000/- ஊக்கத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. அதன்படி முதலிடம் பெற்ற 17 பேருக்கு தலா ரூ.5,000/-, இரண்டாமிடம் பெற்ற 17 பேருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாமிடம் பெற்ற 15 பேருக்கு தலா ரூ.3,000/- ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ்விழா இனி ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது எனவும், அடுத்த ஆண்டு முதல் பனிரெண்டாம் வகுப்பைப் போல, பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கும் பரிசளித்து, பாராட்டு விழா நடத்துவது எனவும் நமது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நமது கௌரவத் தலைவர், ஏற்பாடு செய்த நமது சங்கத்தின் நிர்வாகக்குழு, நன்கொடை நல்கிய நமது உறுப்பினர்கள், விருந்தளித்து மகிழ்ந்த உறுப்பினர் சேர்கைக்குழு மற்றும் ஒத்துழைப்பு அளித்த பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!